விமானம் தரையிறங்கும் போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை சான் டியாகோவில் இருந்து சிகாகோ நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் நிறுத்துவதற்காக ஓடுபாதையில் வந்து கொண்டிருந்தது. விமானம் மெதுவாகச் செல்லத் தொடங்கியதும், பயணிகள் இறங்குவதற்காக இருக்கை பெல்ட்டைக் கழற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது பயணிகளில் ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் அவசர கதவை திறந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் விமானத்தின் இறக்கை தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.
இதையடுத்து விமான ஊழியர்கள் இது குறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பெயர் ராண்டி பிராங்க் (வயது 57) என்பது தெரியவந்தது. விமானத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால், அனைவரும் தரையிறங்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்ததால், அவசர கால வழியைப் பயன்படுத்தியதாக போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் திடீரென அவசர கதவை திறக்க முயன்றார். இதனைப் பார்த்த விமானப் பணிப்பெண் டீ கோப்பையால் அவரது தலையில் அடித்து அவரது செயலை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.