காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார்.
இதன்போது, கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க தொழில் செய்து பிழைப்பு நடத்துவது கண்ணியம், மரியாதை என என் மனைவியிடம் கூறியுள்ளேன்.
நாளை என்னை வேலையிலிருந்து நீக்கப் போகிறார்கள். நான் உறுதியாக இருக்கிறேன். நான் சோகமாக இல்லை. நான் கோபமாக இருக்கிறேன். என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கோபமாக இருக்கிறது. அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”.
மேலும், பணியில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அருகில் கடமையாற்றிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தலையிட முயன்றார், ஆனால் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளார்.
இதேவேளை, அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியதாக பொலிஸ் கான்ஸ்டபிள் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கொழும்பு காலி முகத்திடலில் இன்று 6ஆவது நாளாக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்பொழுது புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.